யாழ்ப்பாணத்தில் 1986ம் ஆண்டு நிர்மாணிக்கப்பெற்ற ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் கலாச்சார மண்டபம் தற்போது சீரழிந்து காணப்படுகின்றது.யாழ்ப்ப்பாண மாநகரசபையிடம் ஒப்படைக்கப்பெற்ற இந்த மண்டபம் இந்த நிலையில் உள்ளதை இந்துப் பெருமக்கள் கூட காண்டும் காணாதது போன்று அசட்டை செய்கின்றார்கள் என்பது வேதனைக்குரியது.
யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபமானது தமிழுக்கும், இந்துசமயத்திற்கும் பெருஞ்சேவையாற்றி புகழ் பெற்ற, ஸ்ரீலஸ்ரீஆறுமுகநாவலர் நினைவாக நிர்மாணிக்கப்பட்டதாகும். இனத்திற்கு, மதத்திற்கு, மொழிக்கு சேவையாற்றியவர்களைப் போற்றிக் கௌரவிக்கும் பண்பு உலகளாவிய ரீதியில் காணப்படும் மரபு ஆகும். நம்நாட்டிலும் அவ்வாறான பெரியார்கள் போற்றப்பட்டு வருகின்றனர்.
இந்துக்களின் வரலாற்றுப் பெருமைமிகு யாழ்ப்பாணம் நல்லூரிலே நிறுவப்பட்டு, தற்போது பாழடைந்த நிலையில் நோக்கம் நிறைவேற்றப்படாத நிலையிலுள்ள நாவலர் கலாசார மண்டபத்தின் நிலைமை இந்நாட்டின் இந்துக்கள் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்துகின்றது. இந்துக்களின் புனித இடமாக நல்லூர் போற்றப்படுகின்றது.
தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும் பணியாற்றிய பெரியாராக நாவலர் பெருமான் விளங்குகின்றார். அவ்வாறு பணியாற்றியரை அவரது மண்ணில் கௌரவிப்பது முக்கியம். யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தை அது நிறுவப்பட்டதன் நோக்கம் பிறழாது பாதுகாக்க வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட அனைவருக்குமே உண்டு.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முயற்சியால் அக்காலத்தில் இம்மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. மேற்படி கலாசார மண்டபம் அன்று நிலவிய சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக யாழ்ப்பாணம் மாநகரசபையிடம் கையளிக்கப்பட்டது.
அவ்வாறு மாநகரசபையிடம் கையளிக்கப்பட்ட போது, சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த மண்டபத்தை உரிய முறையில் பராமரிப்பதும், பாதுகாப்பதும் யாழ் மாநாகர ஆணையாளரின் பொறுப்பு. அத்துடன் இம்மண்டபம் சமூக, கலாசார, கல்வி மற்றும் சமய நிகழ்வுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இம்மண்டபத்திற்குள்ளும் அதன் சுற்றுப்புற எல்லைக்குள்ளும் அசைவ உணவு, மதுபானம் போன்றவை பயன்படுத்தப்படக் கூடாது. எதுவித சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதற்கும் இடமளிக்கக் கூடாது என்பதே அந்த நிபந்தனைகளாகும்.
இன்று அம்மண்டபத்தின் நிலைமையை நோக்கும் போது வேதனை வருகின்றது. ஏற்கனவே மண்டபம் யாழ் மாநகரசபையிடம் கையளிக்கப்பட்ட போது, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மண்டபத்தை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரும் போது அதற்கு இரண்டு மாத கால முன்னறிவித்தல் வழங்கப்படவேண்டுமென்றுஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு முதல் குறித்த நாவலர் கலாசார மண்டபத்தை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் மீளக்கையளிக்கும்படி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாண மாநகரசபை நிர்வாகம் அதைக் கவனத்தில் கொள்ளவில்லையென்பதை ஆவணங்கள் வெளிப்படுகின்றன.
தமிழுக்கும் சைவத்துக்கும் அர்ப்பணிப்பான பணியாற்றிய பெரியாரை நினைவு கூருமுகமாக நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்தின் இன்றைய நிலைமையை ஆராயும் போது அது பாழடைந்த நிலையிலேயே காணப்படுவது தெளிவாகின்றது. குறித்த கலாசார மண்டபம் எதுவித பராமரிப்புமற்ற, கைவிடப்பட்ட, பாழடைந்த ஒரு கட்டடமாகவே காணப்படுகின்றது. தற்காலிக பொறுப்பேற்ற யாழ்ப்பாண மாநகரசபை நிர்வாகம் இக்கட்டட பரிபாலனத்தை உதாசீனம் செய்துள்ளமையைக் கட்டடத் தோற்றமும் அதிலுள்ள உடைத்துக் குவிக்கப்பட்டுள்ள தளபாடங்களும், மலசலகூடங்களின் நிலைமையும், ஏனைய அனைத்து விடயங்களும் புலப்படுத்துகின்றன.
இவ்வாறான ஒரு கட்டடம் எதுவித பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படாத நிலையில் யாழ்.மாநகர மத்தியிலே உள்ளமை கவலைக்குரியது, கண்டனத்திற்குரியது. முக்கிய ஒரு இடத்தில் அமைந்துள்ள இக்கட்டடம் உரிய முறையில் பயன்படுத்தப்படாது இருக்குமானால் உருவாக்கப்பட்ட நோக்கம் தவிர்ந்த வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தும் நிலைமையும் ஏற்படலாம்.
நாவலர் கலாசார மண்டபத்தை பராமரிக்கவோ, பயன்படுத்தவோ, பாதுகாக்கவோ முடியாத இயலாத நிலைமை உள்ளதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகின்றது.
இவ்வாறுள்ள நிலையில் பொதுச்சொத்தான குறித்த கலாசார மண்டபத்தை, அதன் பாதுகாப்பை, பரிபாலனத்தை தொடர்ந்தும் உதாசீனம் செய்வது ஏற்புடையதல்ல. ஏற்கனவே இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி அக்கட்டடத்தை மீளவும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
குறித்த கலாசார மண்டபத்தைப் பொறுப்பேற்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அதை உரியமுறையில் பராமரித்துப் பாதுகாப்பதுடன் நிறுவப்பட்ட நோக்கம் பிறழாது பரிபாலன ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
யாழ். மாநகர நிர்வாகம் குறித்த கலாசார மண்டபத்தை இந்துசமய அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்து அதன் மூலம் சமூகப் பணிகள் தொடர இடமளிக்க வேண்டியதே நியாயம்.
-த.மனோகரன்…
(துணைத்தலைவர், கல்விக்குழு செயலாளர்)
அகில இலங்கை இந்து மாமன்றம்