ஜப்பான், பப்புவா நியு கினி, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். ஜி7 உச்சிமாநாடு நடைபெறும் ஹிரோஷிமா நகரில் உள்ள அமைதிப் பூங்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 42 அங்குல உயரமுள்ள காந்தி சிலையை திறந்து வைத்து வணங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும், ஜப்பான் அரசின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
காந்தி சிலையை திறந்துவைத்த பின்னர் ஜப்பானில் பிரதமர் மோடி நியூஸ் 18 செய்திகளுக்கு பேட்டி அளித்தார். அதில் ஜப்பானின் ஹிரோஷிமா என்றால் இப்போதும் ஒரு வித அச்சம் நிலவுவதாக கூறினார். காந்தியின் வழியில் உலகின் நன்மைக்காக அமைதியான வழியில் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காந்தி சிலை திறப்புக்கு முன்னதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார். கல்வி, திறன் மேம்பாடு, சுற்றுலா, சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்வியல், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஜப்பான் பிரதமரைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் Yoon Suk Yeol, வியட்நாம் பிரதமர் Pham Minh Chinh ஆகியோரையும் சந்தித்த பிரதமர் மோடி, அந்தந்த நாடுகளுடன் இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.