கலாசேத்திரா நாட்டியப் பள்ளியின் முன்னாள் மாணவியும் சிறந்த பரதநாட்டிய ஆசிரியையுமான ஸ்ரீமதி திரிவேணி சங்கர் அவர்களின் முதல் அரங்கேற்றமாக இது இலண்டனில் 23 செப்டெம்பர் 2023 இல் இடம் பெற்றது. உடலும் உள்ளமும் மலர இறைவனுக்கும் குருவுக்கும் சபையோருக்கும் வணக்கம் செலுத்தியபடியே நிகழ்வானது ஆரம்பமாயிற்று. விநாயகர் துதியுடன் , அலாரிப்பும் அவையோரை நெகிழ வைத்தது. அடுத்து தரண்யாவே நடன அமைப்பு செய்திருந்த ஜதீஸ்வரத்தை மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் ஆடி அற்புதம் நிகழ்த்தினார்.
சப்தத்தில் இராமாயணத்தை தன் முகபாவம், அங்க அசைவுகள் மூலம் எம் கண்முன்னே கொண்டு வந்திருந்தார். இராமர் சிவதனுசை வளைத்தல் , வாலியை வதம் செய்தலை மிகவும் தத்ரூபமாக ஆடியிருந்தார். வர்ணமோ முருகன் பிறந்தது, வள்ளியை மணந்தது , அசுரனை அழித்தது என்று நவரசங்களையும் வெளிப்படுத்தி அவையோரை மெய் சிலிர்க்க வைத்தது.
திருமதி திரிவேணி சங்கரால் எழுதி நடன அமைப்பு செய்யப்பட்ட கீர்த்தனம் சிதம்பரத்தை கண்ணால் கண்டு களிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து சிவன் மேல் மகள் கொண்ட காதலை தாய் கேலி செய்வதை பதத்தில் அழகாக அபிநயித்தார். நேரத்துக்கு வராத சிவன் மேல் நாயகி காட்டும் கோபத்தை ஜாவலியிலும் , ராதையை பொருட் படுத்தாது கோபியருடன் விளையாடும் கிருஷ்ணரின் அழகையும் அழகாக அஷ்டபதியில் அபிநயித்து ஆடி அரங்கத்தினரை அகமகிழ வைத்து விட்டார்.
விறுவிறுப்பான வேகம் நிறைந்த தில்லானா அவையோருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. நிறைவாக மங்களத்தை மன மகிழ்வுடன் ஆடி அரங்கத்தினரின் எட்டு திக்கையும் முழுங்க வைத்த கரகோசங்களை தனதாக்கினார்.நாட்டிய அரங்கேற்றத்திற்கு இசைவாக இனிமையான பாடல்களை ஸ்ரீ வம்சிக்கிருஷ்ணா விஷ்ணுதாசும் , ஆடலுக்கு உயிர் கொடுத்த ஸ்ரீ காரைக்குடி R. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மிருதங்கமும் , ஸ்ரீ சிதம்பரநாதன் ஜலதரன் அவர்களின் வயலின் இசையும் , ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதன் அவர்களின் புல்லாங்குழல் இசையும் மிகவும் அற்புதமாக அமைந்திருந்தன.
ஆசிரியையின் அதி உன்னத உழைப்பும் , ஆற்றலும் அரங்கேற்றத்தில் அழகாக வெளிப்பட்டது. தரண்யாவும் முத்திரைகள் , அடவுகள் சுத்தத்துடன் உடல் உறுப்புகளால் , கண்களால் உள்ளக் கருத்துக்களை அழகாக அற்புதமாக ஆடி அசத்தி விட்டார்.
கலாசேத்திரா ஆசிரியர்களை மட்டுமே உள்ளடக்கிய இலண்டன் தமிழ் நிலைய மாணவியின் அரங்கேற்றமும் கலாசேத்திராவிற்கே உரிய சிறப்புகளுடன் மிடுக்காக மிளிர்ந்தது. தரண்யாவின் நாட்டியப் பயணம் தொடர்ந்து சிறப்புற்று வளர தென்னாடுடைய சிவனை வேண்டுகிறேன்.
திருமதி அகல்யா நித்தியலிங்கம்.