‘ஊட்டி வரை உறவு’ என்ற நடிகர் திலகம் நடித்து வெளிவந்த திரைப்படம் புதுமை இயக்குனர் ஶ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவானது. இந்தத் திரைப்படம் நூறு நாட்களை கடந்து வெற்றிப்படப் பட்டியலில் இடம்பெற்றது.
இந்த காலப் பகுதியில் தான் ஒரே நேரத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த ‘இருமலர்கள்’ படமும் 100 நாட்களைக் கடந்தது. இவையிரண்டும் 1967 ல் ஒரே நாளில் திரையிடப்பெற்றன.
ஒரே சமயத்தில் திரையிடப்பெற்று வெற்றிப் படங்களாகத் திகழ்ந்தவை சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களே ஆகும். இது ஒரு சினிமா வரலாறு.
இனி, சிவாஜி கணேசன் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள மூளாய் என்னும் கிராமத்திற்கும் என்ன உறவு என்று பார்ப்போம். யாழ்ப்பாண மக்கள் மீது சிவாஜி கணேசன் அவர்கள் எவ்வளவு அன்பும் பாசமும் கொண்டவர் என்பது பலருக்கு தெரியாத விடயமாகும்.
1952ல் ‘பராசக்தி திரைப்படம் வெளியானதும் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த பிரபல வர்த்தகராகிய சங்கரப்பிள்ளை அவர்கள் ‘பராசக்தி’ மூலம் அறிமுகமாகிய சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் மெய்மறந்து. அவரை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்வதற்காகச் சென்னைக்கு செல்கிறார்.
அங்கு சிவாஜி கணேசன் அவர்களை நேரில் பாராட்டியதோடு. அவரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார்.
இந்தச் செய்தி அக்காலத்தில் வெளியான ‘ஆனந்தவிகடன்’ சஞ்சிகையிலும் பிரசுரமானது குறிப்பிடத்தக்கது.
அந்த பயணத்தின் போது சிவாஜி கணேசன் அவர்களை சுழிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள மூளாய்க்கு அழைத்துச் சென்று அங்கு கட்டடம் எழும்பிக் கொண்டிருந்த காட்சியை அவருக்கு காட்டினார். தொடர்ந்து வர்த்தகரான சங்கரப்பிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி இந்த மூளாய் வைத்தியசாலை கட்டடம் முழுமையாக பூர்த்திசெய்யப்படுவதற்கு 1953ல் மீண்டும் சிவாஜி கணேசன் அவர்கள் தனது நாடகக் குழுவுடன் இலங்கைக்கு வந்து அவருடைய நாடகங்களில் ஒன்றான ‘என் தங்கை’ நாடகத்தை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் மேடையேற்றினார். பின்னர் அதன் மூலம் வசூல் செய்யப்பெற்ற மொத்த தொகையான இலங்கைப் பணம் இருபத்தையாயிரத்தை மூளாய் வைத்தியசாலை கட்டட நிதிக்காக வழங்கினார் சிவாஜி கணேசன் அவர்கள்.
அந்த விஜயத்தின் போது சிவாஜி கணேசன் அவர்களின் பெயர் பதித்த நினைவுக் கல்லும். அவரே தனது கையால் நாட்டிய மாங்கன்றும் இன்று விருட்சமாக வளர்ந்து நடிகர் திலகம் என்னும் கொடைவள்ளலை நினைவு கொள்ளச் செய்கின்றது.
இவ்வாண்டின் சித்திரை மாதத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகன் ராம்குமார் அவர்கள் மூளாய் சென்று தனது தந்தைக்கும் மூளாய்க்கும் உள்ள உறவின் அடையாளமாகத் திகழும் அந்த மாமரத்தின் அடியில் அமர்ந்திருந்து உணர்ச்சி பொங்க கண்ணீர் சிந்தியதை எமது உறவுகள் கண்டு வியந்த காட்சிகள் மற்றும் செய்திகள் யாவருக்கும் தெரிந்த ஒன்றாக விளங்குகின்றது-
அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த எனக்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘மருதுமோகன் எழுதிய ‘சிவாஜி கணேசன்’ என்னும் ஆய்வு நூல் வளியீட்டு விழாவில் தளபதி ராம்குமார் அவர்களை மேடையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது நான் எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ என்ற நூலின் பிரதியொன்றை அவரிடம் கையளித்தேன்
இறுதியாக நண்பர்களே! வாசகப் பெருமக்களே! நாமெல்லாம் ஒன்றிணைந்து சிவாஜி கணேசன் அவர்களின் பெருமைகளை நன்றிகளை நினைவு கொள்ளும் முகமாக என்னால் கனடா உதயன் வார இதழில் தொடராக எழுதப்பெற்று கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி அன்று ‘நடிகர் திலகமும் தமிழ்ச் சினிமாவும்’ நூல்வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தும் ஆதரவு நல்கியும் ஓத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்ஙனம் வீணைமைந்தன் சண்முகரரஜா- மொன்றியால்