காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.
ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7-வது நாளாக பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். பேரழிவின் பிடியில் காசா இருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 500 பேர் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் சேர்த்து 2800-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான சூழலில், காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரித்தது.
காசா நகரில் வசிக்கும் மக்கள், நகரின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு தப்பிச் செல்ல வேண்டும் என்றும், அந்த எச்சரிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் தீவிரவாதிகள் காசா நகருக்கு அடியில் உள்ள சுரங்கப் பாதைகளில் பதுங்கியிருப்பதாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் அவர்களை குறிவைத்து தாக்க ஏதுவாக இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால், ஹமாஸ் இந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளது. காசாவில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. “பாலஸ்தீனிய மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு பகுதிக்கோ அல்லது எகிப்துக்கோ தப்பிச் செல்ல வேண்டும் என மிரட்டல்கள் வந்துள்ளன. எங்கள் பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிப்பு (இஸ்ரேலிய) தலைவர்களின் மிரட்டல்களை நிராகரிக்கின்றனர். எங்கள் நிலத்திலும், எங்கள் வீடுகளிலும், எங்கள் நகரங்களிலும் வசிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் இருந்து இடம்பெயர்வது என்பது நடக்காது” என இஸ்ரேலின் எச்சரிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.
அதேநேரம், 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் உத்தரவு, பேரழிவுக்கான சூழ்நிலை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
“காசாவில் இருந்து வரும் காட்சிகளால் நாங்கள் பயப்படுகிறோம். பாதிக்கப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மில்லியன்மக்கள் செல்ல பாதுகாப்பான இடம் இல்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என யுனிசெப், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.