நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதை தொடர்ந்து கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு நடுநிலைமையுடன் செயல்பட கோரி இந்தியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இதற்கிடையே ஆளும் பா.ஜனதாவின் வகுப்புவாத வெறுப்பு பிரசாரத்திற்கு பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் ஆகியவை உதவுவதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு இந்தியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.
அதில், “பா.ஜனதாவின் வகுப்புவாத வெறுப்பு பிரசாரத்திற்கு உதவுவதில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பங்கு குறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. பா.ஜனதா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் குழுக்கள் வகுப்புவாத பிளவுபடுத்தும் பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடா ளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் செயல்படும் உங்களது தளங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். சமூக அமைதியின்மையை ஏற்படுத்தவோ அல்லது இந்தியாவின் ஜனநாயக கொள்கைகளை சிதைக்கவோ பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.