82 வயது மனைவியை விவாகரத்து செய்ய 89 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 89 வயது முதியவர் ஒருவர் தனது 82 வயதான மனைவியை விவாகரத்து கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
1963-ல் திருமணமான இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். 1984-ல் சென்னையில் ராணுவ வீரராக பணியாற்றிய போது இந்த தம்பதியினர் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் விவாகரத்து கேட்டதை மாவட்ட கோர்ட்டு அனுமதித்தது. ஆனால் பஞ்சாப்– அரியானா ஐகோர்ட்டு மாவட்ட கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது.
இதை தொடர்ந்து 82 வயது மனைவியிடம் விவாகரத்து கோரி 89 வயதான முதியவர் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு மனைவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
எனது கணவரை நான் கவனித்து கொள்ள தயாராக இருக்கிறேன். அவரை விட்டு செல்லும் திட்டமில்லை. விவாகரத்து பெற்றவராக சாவதற்கு நான் விரும்பவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அணிருத்தா போஸ், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்றுக்கொண்டது. 89 வயதான முதியவருக்கு விவாகரத்து வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.