எமக்கான ஒருவராய். ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த அரசியல் ஆளுமைதான் நடிகர் விஜயகாந் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ள கனடா உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அனுதாபச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலை வேட்கைக்கு வடிவம் கொடுத்தவர் – மதிப்பு வழங்கியவர், தழிழீழ ஏதிலிகட்கு குறிப்பாகப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கியதை தமிழ் நாட்டில் நான் தங்கியிருந்தபோது நேரடியாகக் கண்டேன் – நான் அதற்கு சான்று.
‘செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருப்போர் வானத்தவர்க்கு நல்விருந்து’ என்ற குறளுக்கமைய நல்விருந்து வழங்கியவர் விஜயகாந் ஆவார். விஜயகாந்தின் புன்முறுவல் பூத்த முகத்தை நாம் என்றும் மறக்க முடியாது. 150 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தலைசிறந்த நடிகராகவும் விளங்கியவர்.பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் நான் தங்கியிருந்தபோது ஒரு நூல் வெளியீட்டின்போது விஐயகாந் அவர்களும் பழ. நெடுமாறனோடும் கலந்து கொண்டகாட்சி எம்மை புன் முறுவலோடு வரவேற்ற காட்சி நாம் என்றும் மறக்கமுடியாது.
தமிழகச் சட்ட மன்ற உறுப்பினராகவும் , தேசிய முற்போக்கு திராவாடக் கட்சியின் தலைவராகவும் மற்றும் எதிர்கட்சித் தலைவராகவும் விளங்கியவரை ஈழத்தமிழர்கள் என்றும் மறந்து விட மாட்டார்கள்.
இங்ஙனம்
ம.க ஈழவேந்தன் – பாராளுமன்ற உறுப்பினர்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்- கனடா