தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் 850 மீனவர்கள் மற்றும் 12 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது:
திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்களாகிய நீங்கள் எங்கு மனிதர்கள் அவதிப்பட்டாலும் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மனிதநேயம் வரும்போது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மனிதர்களை காப்பாற்றுபவர்களாக நாங்கள் இருப்போம் என இருப்பவர்கள் நீங்கள்தான் என்பது உங்களிடம் இருந்து பல நாடுகளும், பல அரசாங்கங்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும். ஏனென்றால் நிறைய பேர் தவறான கொள்கைகளை வைத்துக்கொண்டு வெறுப்பை மட்டும்தான் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெறுப்புதான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெறுப்புதான் வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அத்தனையும் கடந்து, வெறுப்புகளை கடந்து, கோபங்களை கடந்து மனிதர்களை மனிதர்களதான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் வழியில் வந்து மக்களை காப்பாற்றுவதற்காக மீனவர்களாகிய நீங்கள் ஒரு மிகப்பெரிய அன்பின் பாடத்தை சொல்லி தந்திருக்கிறீர்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல் நிலையத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் நாங்கள் மக்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இறுதியாக மீனவர்கள் நாங்கள் இருக்கின்றோம் என்று வந்தாலும் தண்ணீர் செல்கின்ற வேகத்தில் அந்த படகை செலுத்த முடியாத நிலை இருந்தது. ஆனாலும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தண்ணீரில் இறங்கிய போதுதான் அந்த தைரியம், அன்பு, வீரம், மனிதநேயம் ஆகியவற்றை கண்கூடாக பார்க்க முடிந்தது.
இப்படிப்பட்ட மக்கள் தமிழர்களாக, மனிதர்களாக, நம்மால் ஒற்றுமையாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக நிற்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்கள் நீங்கள். ஒரு வேளை உணவை பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு தருவதற்கு இந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர்கள் இங்கே இருக்கக்கூடிய நீங்கள்தான்.
உங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். நான் அமைச்சருடன் சேர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பேசி நிச்சயமாக அதை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை செய்வேன். அதுமட்டுமல்லாமல் இன்னும் உங்களுடைய நிறைய கோரிக்கைகள் இருக்கின்றன. அதையும் நிச்சயமாக நிறைவேற்றி தருவதற்கான முயற்சிகளை எடுப்போம். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.