சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, யுமாஜின் – வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலாவது மாநாடு 2023ம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் “யுமாஜின் 2024” எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இலவச வைஃபை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிதிநிலை அறிக்கையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதன் முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரைகள் போன்ற சென்னையின் 500 முக்கிய இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.