தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கராவும், சிறந்த உரையாடலாசிரியருக்கான விருதை இரா.சரவணனும் பெற்றனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான திரைப்பட விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக சுதா கொங்கராவிற்கும், சிறந்த உரையாடலாசிரியர் விருது ‘கத்துக்குட்டி’ திரைப்படத்திற்காக இரா.சரவணனுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளர் விருது ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘பாபநாசம்’ திரைப்படத்திற்காக ஜிப்ரானுக்கும், சிறந்தப் பாடலாசிரியர் விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக விவேக்கிற்கும் வழங்கப்பட்டது.