கடந்த சில நாட்களாகவே சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த 2 வார்த்தைகள் அடிக்கடி உலாவி கொண்டிருக்கின்றன. வலையொளி, படவரி, வலைத்தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தை பற்றிய கருத்துகள், முன்னோட்ட காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. திரையரங்குகளுக்கு சென்று பார்த்த பலரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மலையாளத்தில் வெளியானாலும், தமிழகத்தில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு சில காரணங்களை சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் குணாகுகையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைப்பகுதியை அதில் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் 1991-ம் ஆண்டும் வெளியான ‘குணா’ தமிழ் திரைப்படத்தை மையப்படுத்தியும் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடல் தான் திரைப்படத்தின் உயிரோட்டமாக அமைந்துள்ளது. இதனாலேயே தமிழகத்தில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக படத்தின் கதைக்கரு. அதுவும் 2006-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து திரைப்படம் எடுத்துள்ளனர். கேரள மாநிலம் மஞ்சுமெல் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது அவர்கள் குணாகுகையை பார்வையிட செல்கின்றனர். தடையை மீறி ஆபத்தான குணாகுகைக்குள் நுழைகின்றனர். அப்போது அவர்களில் ஒருவர் ஆழமான குழிக்குள் தவறி விழுந்துவிடுகிறார். அவரை நண்பர்கள் எப்படி காப்பாற்றினார்கள் என்பதே படத்தின் கதை. ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப கதைக்களம் இருந்தது. இதுவும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் தற்போது கொடைக்கானலுக்கு, குறிப்பாக குணாகுகையை பார்வையிட படையெடுத்து வருகின்றனர். நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தின் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய கேரள குழுவினர் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். தனியார் யூடியூப் சேனல் மூலம் நடைபெற்ற சிறப்பு படப்பிடிப்பிற்காக அவர்கள் வந்திருந்தனர். குறிப்பாக குணாகுகைக்குள் சென்று ஆபத்தான குழிக்குள் விழுந்த சுபாஷ் சந்திரன், குழிக்குள் இறங்கி அவரை காப்பாற்றிய குட்டன் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது அவர்கள் குணாகுகை பகுதிக்கு நேரில் சென்று, 2006-ம் ஆண்டு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்கிடையே அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், நிஜ ‘மஞ்சுமல் பாய்ஸ்’ நண்பர்கள் குழுவினரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு வருகை தந்த தமிழ் திரைப்பட நடிகரான முனிஸ்காந்த், நிஜ ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், “மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது. திரைப்படத்தை பார்த்தபோது உங்களது உண்மையான கஷ்டத்தை நான் உணர்ந்தேன்” என்று கூறினார்.