திமுக அரசின் சாதனைகளால் தூத்துக்குடி தொகுதியில் தனது வெற்றி உறுதி ஆகிவிட்டது என்று வேட்புமனு தாக்கலுக்கு பின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.
வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக 2ஆவது முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இவர் இன்று (மார்ச் 26) காலை தனது வேட்பு மனுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்
முன்னதாக திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி “மீண்டும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. சென்ற இடமெல்லாம் மக்கள் ஆர்வமும் திமுக அரசு சாதனைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தான் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் மேயர் ஆகியோர் நன்றாக உழைப்பதால் தாங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது மக்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள் என்றார்.