திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முக்கிய விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த நிலையில் சுமார் 3 கி. மீட்டர் சுற்றளவு கொண்ட கிரி வீதியில் கோவிலுக்கு செல்லும் பாதை, ரோப் கார், வின்ச் மற்றும் சுற்றுலா பஸ் நிலையங்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு பஸ் 5க்கும் மேற்பட்ட பேட்டரி கார்களும் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பக்தர்களின் வசதிக்கு அது போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் பக்தர்கள் போக்குவரத்துக்கு வசதியாக தனியார் நிறுவனம் சார்பில்
ரூ. 45 லட்சம் செலவில் 2 மின்சார பஸ்களும், ஒரு டீசல் பஸ்சும் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
முன்னதாக இந்த வாகனங்களுக்கான சிறப்பு பூஜை பழனி அடிவாரம் உள்ள பாத விநாயகர் கோவில் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை உரிமையாளர்- சந்திரன், வினித் குமார் ஆகியோர் வாகனத்தின் சாவியை பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையர்- மாரிமுத்துவிடம் வழங்கினார்கள். மேலும்,ஒரு மின்னூட்ட பேருந்து டீசல் பேருந்துகளையும் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் இணை ஆணையர்- வெங்கடேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி- வியாச நாராயணன், கண்காணிப்பாளர்- சந்திரமோகன், பேஷ்கார் நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.