மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம், தமிழ் மொழி கற்றுக் கொள்ளட்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி பேசினார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட லிங்கம்பட்டி, பூசாரிபட்டி, தாமஸ் நகர் மணி கூண்டு, சண்முக நகர் பேருந்து நிறுத்தம் – கடலையூர் சாலை, வடக்கு திட்டக்குளம், முத்துநகர், சண்முக சிகாமணி நகர் – பசுவந்தளை சாலை, மந்திதோப்பு, ஊத்துப்பட்டி, இடைச்செவல், இனாம் மணியாச்சி ஆகிய இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், முருகேசன் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேற்கண்ட இடங்களில் கனிமொழி பேசியதாவது:-
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதம் 1.15 மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் விடுபட்ட மகளிர்க்குத் தேர்தலுக்குப் பிறகு இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.
காலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பொழுது பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஏராளமான பணிக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் நிதியாக அளிக்கும் பொழுது நமக்கு 29 பைசா மட்டுமே நிதி பகிர்வாக அளித்து வருகிறது, ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் இரண்டு ரூபாய் என இரட்டிப்பு நிதி பகிர்வு அளித்து, தமிழ்நாட்டை ஓரவஞ்சனை செய்கிறது.
தமிழ்நாடு கடந்த டிசம்பர் மாதம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் மக்களின் பாதிப்புகளைப் பார்க்காத பிரதமர், தேர்தல் சமயம் என்றவுடன் 10 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்று உள்ளார்.
தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் வகையில், பேசி வரும் பாஜகவினர். குறிப்பாக இந்தி மொழி எதிர்ப்பிற்காக பலதரப்பட்ட போராட்டங்களை ஈடுபடுத்தி உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் போராட்டத்தை அறுந்த செருப்பு எனக் கொச்சைப் படுத்தியுள்ளார், அண்ணாமலை.
தமிழ்நாட்டிற்குப் புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பொழுது நிதி கேட்டதற்கு ஒன்றியத்தில் தற்போது உள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏன் பிச்சை கேட்கின்றனர் என்று இழிவுபடுத்தக்கிறார்.
தற்போது பாஜகவில் உள்ள முன்னாள் நடிகை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை பிச்சையெனக் கூறியுள்ளார்.
மோடிக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தமாக உள்ளதாம், தமிழ் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டுமாம், பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்கப் பார்க்கிறார். இப்போது கூட ஒரு பிரச்சனையும் இல்லை ஒரு நல்ல ஆசிரியரை அனுப்புகிறோம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும் மோடி.
பாஜகவும் – அதிமுகவும் பிரிந்துவிட்டதாக கூறுவது நாடகமானது, தேர்தல் முடிந்த பிறகு அதிமுக பாஜகவை ஏற்றுக் கொள்ளும், தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி எங்காவது பாஜகவைப் பற்றியோ, மோடியை பற்றியோ வாய் திறக்கவில்லை. அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான், இரண்டுமே ஸ்டிக்கர் கட்சிகள்,
ஒன்றியத்தில் மக்களுக்கான ஒரு ஆட்சி அமைய வேண்டும், மதத்தால் ஜாதியால் பிரிவினையை ஏற்படுத்தி வரும் இவர்களை விரட்டி அடிக்க வேண்டும், 40-ம் நமதே நாடும் நமதே என்று கூறி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தனக்கு வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.