ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றும் தேர்தல் என ராஜஸ்தானில் பிரசாரத்தில் ராகுல் பேசுகையில் குறிப்பிட்டார்.
ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை கொண்டு வாருங்கள். இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள். பணவீக்கத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என பெண்கள் கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பா.ஜ.,வினர் பேசுவதில்லை.
மக்களின் கவனத்தை திசை திருப்புவதே அவர்களின் வேலை. 20 தொழிலதிபர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். 1 ஆண்டு தொழில் பயிற்சி மற்றும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். நன்றாக வேலை செய்தால் அவர்களுக்கும் வேலை கிடைக்கும். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றும் தேர்தல். ஒருபுறம், பெரிய தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., பணம் பெற்றுள்ளது. மறுபுறம் காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. நாட்டின் உண்மையான பிரச்னைகளான வேலையின்மை மற்றும் பணவீக்கம் பற்றி ஊடகங்கள் மக்களுக்கு சொல்லாது. இவ்வாறு அவர் பேசினார்.