பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வுகளில் தமிழகமே முதலிடத்தில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மகப்பேற்றுக்குபின் கவனிப்பு, கணினி பொருட்கள், ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழகமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவு படுத்துகின்றன. ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022ம் ஆண்டின் குறியீடுகளில் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இறக்குமதி – ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022-23ம் ஆண்டிற்கான விவரங்களை மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழகம் மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்து 2ம் இடத்தை பெற்றுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் 3.31 புள்ளிகளை பெற்று இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் நடைபெறுகின்றன. குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளை பராமரித்து காப்பதிலும் தமிழகம்தான் முன்னணியில் உள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழகம் 89.9 சதவீதங்களை பெற்று முன்னணி மாநிலமாக திகழ்கிறது. அதிக அளவில் 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை பெருக்கி இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.