அமைச்சர் மனோதங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ஒரு நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்!
அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம்!
இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்திய மக்கள் அனைவருக்கும், அவரவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவும், உணவை உண்ணவும், தொழிலை செய்யவும் முழு உரிமையை வழங்கியிருக்கிறது. ஆனால் பிரதமருக்கு, இந்திய அரசியலமைப்பு சாசனம் என்று சொன்னாலே, பாகிஸ்தான் போன்ற உணர்வு வருகிறது. மோடி தேர்தல் பிரச்சாரத்தில் “புனிதமான சாவன் மாதத்தில், ஆட்டிறைச்சியை சமைத்துச் சாப்பிட்டு, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சியினர் புண்படுத்துகின்றனர்” எனப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தை பொறுத்தவரை மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை உண்ணுகிறவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ராமரே காட்டில் மாமிசத்தை தான் சாப்பிட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களிலும் மாமிச உணவு உண்பவர்களும், தாவர உணவு உண்பவர்களும் இருக்கிறார்கள். இந்த உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டு, காஷ்மீர் பகுதியில் தாவர உணவுகளை உட்கொள்ளும் சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்ட உள்நோக்கத்துடன் விஷ கருத்துக்களை தூவியுள்ளார், பிரதமர். இதே போல இடத்திற்கு இடம் மக்களின் உணர்வுகளைத் தூண்ட ஒரு பிரதமர் பேசுவது மிகவும் ஆபத்தானது.
இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி பேசிய வரலாறு இல்லை, இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு, உலக அரங்கில் இந்திய பிரதமரின் மதிப்பீட்டை தரந்தாழ்த்தும்.
இவற்றை பார்த்துக்கொண்டு தேர்தல் ஆணையம் மௌனியாய் இருப்பது வெட்கக்கேடு.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.