ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கமுதியில் பேசியதாவது: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பண்பாளர். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவார். கச்சத்தீவை ஒப்படைத்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் இப்போது கச்சத்தீவை மீட்போம் என்கிறார்கள். மீனவர்களின் பாதுகாப்பு மிக அவசியம், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது. உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த். தமிழர்களுக்காக டில்லியில் போராட்டம் நடத்தினார். மானாமதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி வழியாக ரெயில் பாதை அமைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் .தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சிதான். அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.