‘எந்த அரசு வேண்டுமென நீங்களே யோசித்து முடிவு செய்யணும்,” என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பேசியதாவது:
பொள்ளாச்சிக்கும், எனக்கும், 60 ஆண்டுகள் தொடர்பு உள்ளது. சிறுவனாக இருந்த போது, மகாலிங்கம் பாலிடெக்னிக் கல்லுாரியில் விடுமுறையில் நாடகம் நடக்கும். அதற்காக ஆண்டுதோறும் இரு மாதங்கள் வந்து தங்குவேன்; 20 நாட்கள் நாடகம் நடக்கும். பொள்ளாச்சியில் இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன. மொத்த தமிழகத்தில், நான்கு கோடி தென்னை மரங்கள் தான் உள்ளன. இதற்காக வளர்ச்சி வாரியம் அமைத்தது; உழவர் சந்தை அமைத்தது, சந்தைக்கு சுமைகளை எடுத்துச் செல்ல பேருந்தில் டிரான்ஸ்போர்ட் கூலி இல்லாமல் செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. மேலும், அவரது ஆட்சியில், விவசாயக்கடன், 7,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார்; இன்றைய கணக்குப்படி பல லட்சம் கோடிகள் வரும். இது தான் திராவிட மாடல்; திராவிட மாடலை கிண்டல் செய்யாதீங்க; நம்ம மாடல். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், இலவச மின்சாரம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், இரண்டு லட்சம் மின் இணைப்புகள். இவை எல்லாம் செய்தவை; செய்யப்போது இன்னும் இருக்கின்றன. கடந்த, 10 ஆண்டுகளில் விவசாய நலனுக்காக மத்திய அரசு என்ன செய்துள்ளது; ஒன்றும் செய்யவில்லை என்பது தான் உண்மை. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்கத்தான் டில்லி போனார்கள்; சீனாவில் இருந்து ஊடுருபவர்கள் வந்தால், எப்படி தடுக்க வேண்டுமோ அந்த மாதிரி விவசாயிகள், ஆணி படுக்கை போட்டு வரவேற்றனர். எந்த அரசு வேண்டும் என நீங்களே யோசித்து முடிவு பண்ணணும் ; விவசாயம் செழிக்கணும். சேரன் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டுமென்றால், எந்த அரசுக்கு ஓட்டுப்போட வேண்டும் என உங்களுக்கு தெரியும். நாளை நமதாக வேண்டுமென்றால் அதை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.