கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள்; ஆனால், பா.ஜ.வின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?” என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக சிவகங்கையில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள்; ஆனால், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? 10 ஆண்டுகளாக அரைத்த மாவையே தான் தேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர்.
சாத்தியமே இல்லாத திட்டங்கள் எல்லாம் கூறி பா.ஜ. மக்களை ஏமாற்றி திசை திருப்ப முயற்சிக்கிறது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. பா.ஜ. அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது இந்திய மக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தி பெரும் மோதல்களுக்கு வழிவகுக்கும். பா.ஜ. ஆட்சியில் இந்திய ஜனநாயகத்திற்கும், சகிப்புத்தன்மைக்கும் பேராபத்து எழுந்துள்ளது. அவர்களின் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் போன்றவை மக்களை பிளவுப்படுத்துவதுடன் நாட்டை சர்வாதிகார பாதையில் செலுத்தும். நாட்டை உடைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பா.ஜ. கூறுகிறது. ஆனால், பா.ஜ., தான் நாட்டை உடைக்கிறது; ஜம்மு காஷ்மீரை மூன்றாக உடைத்தது யார்? இந்தியாவை சர்வாதிகார பாதையில் கொண்டு செல்ல பா.ஜ. திட்டமிட்டு செயல்படுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.