ஏப்.19ல் தமிழகத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளதாவது: ஏப்.19, நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள். கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஓட்டு. இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யக்கூடிய தேர்தல். அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கும் தேர்தல். மதம், சாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ, உங்கள் (வாக்காளர்கள்) அளிக்கும் ஓட்டு தான் வலிமையான ஆயுதம். நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் உற்ற துணையாக இருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள், இந்தியா முழுவதும் எதிரொலிக்க இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள்.
பா.ஜ., அதிமுக கட்சிகளை ஒருசேர வீழ்த்த வேண்டும். தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க, தமிழையும், தமிழர்களையும் உண்மையாக நேசிக்கும் மத்திய ஆட்சி டில்லியில் அமைய, திமுக மற்றும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.