மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது அணுசக்தி போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடுமையான போர் காரணமாக ஈரானில் கடுமையான சேதமடைந்துள்ள நிலையில், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நிலநடுக்கம் ரிக்டரில் 4.3ஆக பதிவாகி உள்ளது. ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க நிலநடுக்கவியல் துறை வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தெற்கு ஈரானில் உள்ள கெராஷ் பகுதியில் ஏற்பட்டதாகவும், இது பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.






















