– யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி குறித்து செல்வராஜா கஜேந்திரன் கருத்து
ந.லோகதயாளன்.
“யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள். கரவெட்டி பிரதேச சபையினுடைய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அங்கு கருத்து சொல்கின்றவர்களைக் காணொளி எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற குழப்பம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு தரமுயர்த்துவது தொடர்பான விவகாரத்திலும், தையிட்டி விகாரை காணி விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கருத்துக்களை முன்வைத்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குழப்பமடைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை உரையாட விடாமல் தடுத்து தொடர்ச்சியாக குழப்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசினுடைய தேவையை நிறைவு செய்வதற்காகவே அர்ச்சுனா இராமநாதனை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பயன்படுத்திக் கொண்டார்.
எனினும் அந்த விடயங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதியாக நின்று மக்களுடைய காணிகளைச் சுவீகரிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த போது, பொதுமக்கள் அரங்கில் இருந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எழுந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிராகக் கூச்சலிடத் தொடங்கினார்கள். அவர்கள் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள்.
கிராமங்களிலே அடிதடி, வன்முறைகளில் ஈடுபடுகின்ற நபர்களே காடைத்தனமாகக் கூக்குரலிடுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். குறிப்பாக வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையினுடைய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எவ்வாறு அந்தக் கூட்டத்துக்கு வந்தார் என்பது தெரியாது. அவர் அமைச்சர் சந்திரசேகருடைய அடியாளாகவே கலந்துகொண்டிருந்தார்.
அவர் அங்கு கருத்துச் சொல்கின்றவர்களைக் காணொளி எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ஊடகவியலாளர்களை வீடியோ எடுத்து அச்சுறுத்தினார். தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி நின்ற அப்பாவிப் பொதுமக்களை வீடியோ எடுத்து அச்சுறுத்தியிருந்தார். அது மட்டும் அல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய பிரதிநிதியாக நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துச் சொல்ல முற்பட்டபோது எனக்கு முன்னால் வந்து நின்று என்னை சபை நடவடிக்கைகளைப் பார்க்க விடாமல் தடுத்துக் கொண்டு என்னைக் காணொளி எடுத்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதில்லை. மக்கள் மத்தியில் எங்களுடைய கருத்துக்கள் செல்வது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு அச்சப்படுகின்றது. தங்களுடைய இனவாத முகம் அம்பலப்படுவதை தடுக்கக் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்கும், ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கும், அங்கே வருகின்ற மக்களைத் தமது பிரச்சினைகளைக் கூறவிடாமல் அச்சுறுத்துகின்ற செயற்பாடுகளைச் சந்திரசேகர் தலைமையிலான இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றார்.






















