அசாமில் வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு சீசனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், மாநிலம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சிவசாகர் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் ஏற்பட்ட புதிய உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தின் 7 மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், அடுத்த சில நாட்களுக்கு அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















