அரச குடும்பத்தில் முதல் முறையாக டென்மார்க் இளவரசி ராணுவ பயிற்சியில் சேர்ந்தார். டென்மார்க் மன்னர் பிரடெரிக் -ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். இந்த நிலையில் அவர், டென்மார்க்கில் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட 11 மாத கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தில் சேர்ந்து உள்ளார். ஸ்லாகெல்சில் உள்ள கார்ட் ஹுசார் ரெஜிமென்ட் பிரிவில் பணியில் சேர்ந்து தனது ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளார். பெண்களையும் உள்ளடக்கிய மற்றும் நீண்ட காலப் பயிற்சியைக் கொண்ட டென்மார்க்கின் விரிவுப்படுத்தப்பட்ட தேசிய சேவை அமைப்பின் கீழ் பணியாற்றும் முதல் குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இளவரசி இசபெல்லா அரச குடும்பத்திலிருந்து முழுமையான கட்டாய ராணுவ சேவைக்கு உட்படும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார். அவர் தனக்கு எந்த ராணுவ ஊதியத்தை வேண்டாம் என்று கூறி உள்ளார். இசபெல்லாவின் மூத்த சகோதரரான பட்டத்து இளவரசர் கிறிஸ்டியன் இந்த ராணுவ முகாமில் தனது பயிற்சியை நிறைவு செய்தார். அவர் தற்போது 2-ம் லெப்டினன்டாகப் பயிற்சி பெற்று வருகிறார். டென்மார்க் அரச குடும்பத்தில் ராணுவ சேவை என்பது பாரம்பரியமாக கடைபிடித்து வந்தாலும், புதிதாக விரிவாக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் இராணுவ சேவையை நிறைவு செய்யும் முதல் அரச குடும்ப பெண் என்ற பெருமையை இளவரசி இசபெல்லா பெற்றுள்ளார்.















