தாய்லாந்தில் அரசு பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய மாணவன் உள்பட 6 பேர் பலியானார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிரிழப்புகள் மற்றும் படு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாங்காக்கிற்கு வடமேற்கே உள்ள மாகாணத்தில் உள்ள டெப்சிரின் நொந்தபுரி பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததை ராயல் தாய் காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பள்ளிக்குள் இருந்த ஒரு மாணவர் என்று உள்துறை அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர் அர்சித் சம்பந்தரத் தெரிவித்தார். மேலும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாக அப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் திடீரென தன் கையிலிருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கியதால், பயந்துபோன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வகுப்பறைகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இத்தாக்குதலில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த கொடூர சம்பவத்தில் மூன்று ஆசிரியர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் என 6 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவசரக்கால மீட்புக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவன், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், துப்பாக்கிசூடு நடத்திய மாணவர் உட்பட 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















