அமெரிக்காவில் மகள் கண்முன்னே இந்திய தொழிலதிபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். குஜராத் மாநிலம் மகிசானா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 62). இவர் அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் நகரில் மதுபான விற்பனை கடை நடத்தி வந்தார். இந்த மதுபானக்கடையை சுரேஷ் கடந்த வாரம் திங்கட்கிழமைதான் விலைக்கு வாங்கியுள்ளார். இவருக்கு 19 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சுரேஷ் தனது மகளுடன் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் மற்றும் கடை ஊழியர்கள் கடையில் இருந்த பணத்தை கொடுத்துள்ளனர். அதை வாங்கிக்கொண்ட கொள்ளையன் திடீரென சுரேஷ் மற்றும் கடை ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான். இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த சுரேஷ் மகள் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடை ஊழியர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான். இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்த காவல்துறை, விரைந்து சென்று காயமடைந்த ஊழியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கொல்லப்பட்ட சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற கொள்ளையனை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் கருப்பினத்தை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.
















