நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,252-ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் முற்றிலும் நாசமாகி விட்டன. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு, சகதி அனைத்தும் சுமார் 8 மாவட்டங்களை நிறைத்து இருக்கின்றன. கிராமங்கள் மற்றும் நகரங்கள் என ஆற்றின் போக்கில் இருந்த பகுதிகள் அனைத்தும் சேறு சகதியால் நிறைந்து காணப்படுகின்றன. வரலாறு காணாத இந்த பேரிடரில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் இன்று 9-வது நாளாக நீடிக்கிறது. நேபாளம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் துணையுடன் நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளின்போது அடுத்தடுத்து உயிரிழந்தோரின் உடல்கள் சிக்கி வருகின்றன. இதில் தற்போது வரை 1,252 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட உடல்கள் சிக்கி வருவதால் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. மீட்கப்பட்ட உடல்கள் பெரும்பாலும் உருக்குலைந்து காணப்படுவதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே அவற்றுக்கு மரபணு சோதனை நடத்தி மொத்தமாக புதைக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் இந்த உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றின் புகைப்படங்களை நேபாள காவல்துறையின் இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். இவ்வாறு 911 பேரின் புகைப்படங்கள் பதிவேற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை கைப்பற்றப்பட்ட உடல்களில் வெறும் 95 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருந்த 6,500-க்கு அதிகமானோர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். அதேநேரம் வெள்ளத்தில் மாயமானவர்களில் இன்னும் 4,875 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடங்குவர். எனவே அவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில் காவல்துறை, ராணுவ வீரர்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் மாயமானவர்களை தேடுவதுடன், சேதமடைந்த சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பேரிடர் பாதித்த ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் நேற்று இரவு பெய்த மழை காரணமாக நீர்மின் நிலைய சுரங்கங்கள் நீர் நிரம்பி காணப்படுகின்றன. இந்த கடினமான சூழலால் அவற்றில் சிக்கியிருக்கும் சுமார் 600 பேரை மீட்கும் பணிகளில் சிக்கல் நீடிக்கிறது. நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள் இரவு பகலாக நடத்தி வரும் தேடுதல் வேட்டை இதுவரை எந்த பலனையும் அளிக்கவில்லை. அங்கே சிக்கியிருப்பவர்கள் பற்றிய எந்த துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் மீட்புப்பணிகளுக்கான நவீன தளவாடங்களை சுரங்கப்பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. அத்துடன், சுரங்கங்களின் வாயில் பகுதியை கண்டறிவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் சுரங்க மீட்புப்பணிகள் பெரும் மந்தமாகவே நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேரிடரில் சிக்கியவர்கள் தொடர்ந்து பிணமாக மீட்கப்படுவதும், மாயமான ஆயிரக்கணக்கானோரை பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பதும் நேபாளம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
















