மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ராஜ் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 25க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி அனுராக் சுஜானியா தலைமையிலான போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை துவங்கி உள்ளனர். இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அம்மாநில முதல் மந்திரி மோகன் யாதவ், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும், பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பொறுப்பு அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
















