– பா.அரியநேத்திரன் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
யாழ்பாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், 25 ஜூன் அன்று அவருக்கு 62,வயதாகும். ஆனால், கடந்த 2006, நவம்பர்,10ம் திகதி அவரது 44வது வயதில், மகிந்தராசபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு, அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சோகம், கொழும்பில் அரங்கேறியது.
தமிழரசு கட்சிக்குள் குத்து வெட்டுக்கள் இருந்திருக்காது
அவர் இன்று இருந்திருந்தால் 17, வது இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு எந்த இடையூறுகள், குத்து வெட்டுகள் இன்றி அவரே தலைவராக நிச்சயமாக பேராதரவுடன் தெரிவாகி இருப்பார். தனது மக்களின் விடிவிற்காக தனது உயிரையே கொடுக்க தயாராக இருந்த ஒரு தலைவர் மத்தியில் இன்று தங்களுடைய தங்களுடைய சுய நலனுக்காக நடிப்பு அரசியல் செய்து வாக்கு வங்கிகளையும் நிரப்பும் நோக்கில் செயற்படும் தமிழ்தேசிய அரசியல் வாதிகள் கட்சியின் தலைவர்கள் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அரசியல் பயணத்திலிருந்து இருந்து பெற வேண்டிய பெறுமதியான படிப்பினைகளை உள்வாங்குவதில் தவறிவிட்டார்கள்.
இன்று தமிழரசுக்கட்சியை நீதிமன்றில் நிறுத்திய நிலைமை அவர் இருந்திருப்பின் ஏற்பட்டிருக்காது. தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகள் உயிர்புடன் ஒற்றுமையாக முன்நோக்கி சென்றிருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இருந்திராது.
அவர் தந்தை செல்வாவின் அகிம்சைப்போராட்ட அரசியலையும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப்போராட்ட அரசியலையும் நேசித்தார்.
மாமனிதர் ரவிராஜின் முன்மாதிரி
மாமனிதர் ரவிராஜ் அவர்களிடம் நாம் கண்ட துணிச்சலையோ இதயசுத்தியான நடத்தையையோ நேர்மையையோ எந்த தமிழ்தேசியகட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடமோ, அதன் தலைவர்களிடமோ நாம் எதிர்பார்க்கமுடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் எம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய நேர்மையான தமிழ்த்தேசிய அரசியல் கொள்கையை அவருடைய அன்பு மனைவி, மற்றும் பிள்ளைகள், முன்கொண்டு செல்வது வடகிழக்கு தமிழ்த்தேசிய அரசியலுக்கு பக்கபலமாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். அன்பு மனைவியாக சஷிகலா அவர்களை திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையாக வாழ்ந்தார். இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
2004, ல் 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் மாமனிதர் ரவிராஜ் அவர்களும் எங்களுடன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் 2004, ல் தேர்தல் இடம்பெறுவதற்கு மூன்று வாரத்துக்கு முன்னமே விடுதலைப்புலிகளுக்குள் பிழவு ஏற்பட்டு அதில் இருந்து கருணா என்பவனும்,சிலரும் விலகி கிழக்கில் பிரதேசவாத அரசியலுடன் தமிழ்தேசிய அரசியலுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ் ஆயுதக்குழுக்களாக இவர்களை பயன்கடுத்தி ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் படுகொலைகளும் இடம்பெற்றமையால் 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் கொழும்பில் ஜெயவர்தன புர பாராளுமன்ற உறுப்பினர் விடுதி அமைந்த மாதிவெலயில் தங்கியிருந்த காலமாகும்.
மட்டக்களப்பு வாகரை மக்கள், மீதான எறிகணை தாக்குதல்
அந்தவேளையில்தான் 2006,யூலை மாதம் திருகோணமலை மாவிலையாற்றில் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சம்பூர் மூதூர் பகுதி மக்கள் மட்டக்களப்பு வாகரையில் தஞ்சம் அடைந்திருந்தனர். 2006,நவம்பர் 8,ம் திகதி வாகரையில் அகதிமுகாம்களில் தங்கி இருந்த அப்பாவி பொது மக்கள் மீது இராணுவம் மேற்கொண்ட எறிகணை்தாக்குதலால் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டும்நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தும் இருந்தனர். மறுநாள் 2006,நவம்பர்,9ம் திகதி காலை 9, மணிக்கு கொழும்பு நகரில் ஐ.நா செயலகத்திற்கு முன்பாக, இராணுவம் மேற்கொண்ட அத் தாக்குதலை கண்டித்து ஒரு கவன ஈர்ப்புபோராட்டத்தை்நடத்தினோம். இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்தவர் மாமனிதர் ரவிராஐ்தான்.
இந்தப்போராட்டம் இடம்பெற்று நாம் கலைந்து செல்லும்போது மாமனிதர் ரவிராஜ் என்னிடம், மச்சான் நாளை நானும் நீரும் வாகரைக்கு போவோம் எவரிடமும் கூறாமல் திடிரென வாகரைக்கு சென்று அங்கு உயிர் இழந்த மக்களையும் காயப்பட்ட மக்களையும் நேரடியாக பார்த்து வருவோம் நான் நாளை காலை 9, மணிக்கு மாதிவெல விடுதிக்கு வருவேன் ஆயத்தமாக இரு எனது வாகனத்தை மட்டும் கொண்டு செல்வோம் உனது வாகனம்உனது பொலிசார் தேவையில்லை என கூறினார்” நானும் உடனே சம்மதித்து மறுநாள் வாகரை செல்வதற்காக 2006, நவம்பர், 10, ம் திகதி தயாராக இருந்தேன்.
நவம்பர்,10,ம் திகதி காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை “தெரண” தொலைக்காட்சிக்கு மாமனிதர் ரவிராஜ் நேர்காணல் அளித்தார். அதுதான் அவர் இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார். அந்த நேர்காணலை முடித்து விட்டு திரும்பவும் அவருடைய வீட்டில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவரது சிவப்பு நிற ஜீப் வண்டியில் என்னை ஏற்றுவதற்காக ஶ்ரீ ஜெயவர்தனபுர மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதிக்கு வரும்போதே 2006, நவம்பர் ,10, வெள்ளிக்கிழமை காலை 8. 15, மணியளவில் அவர்மீது மீது கொலைகாற கும்பல்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொது ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
பின்னர் மாமனிதர் ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து கொழும்பில் திங்கட்கிழமை 2006, நவம்பர்,13, ல் பாரிய கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்பேரணியில் அனைத்து மூன்று இன மக்களும் வேறுபாடுகள் இன்றி அரசியல், மதத் தலைவர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களைம் கலந்து கொண்டனர்.
தேசியத் தலைவர் வழங்கிய மாமனிதர் கெளரவம்
தேசியதலைர் பிரபாகரன் அவர்களால் தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார். தேசியதலைவருடைய அந்த அறிக்கையில் “நடராஜா ரவிராஜ் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர், அபூர்வமான குண இயல்புகளைக்கொண்டவர், பந்த பாசங்களுக்கு அடிமைப்பட்டு பொருள் உலகால் ஆட்டிப்படைக்கும் ஒரு பொம்மை மனிதரல்ல அவர் தமிழீழ மக்கள் மீதும், மண்மீதும் ஆழமான பற்றும் பாசமும் கொண்டவர்” என அறிக்கையில் குறிப்பிட்டு மாமனிதர் மதிப்பை வழங்கி இருந்தார்.
உண்மையில் துடிப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராக என்னுடன் பயணித்த காலத்தை மறுக்கமுடியாது தனக்கு வாக்களித்த யாழ்மாவட்ட மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டு இன ஒற்றுமையை மனதில் கொண்டு போராடிய ஒரு தலைவரே மாமனிதர் ரவிராஜ்.