வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை
யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞர் குழுவினர் யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி வவுனியா நோக்கி காரில் பயணித்தனர். இந்நிலையில் அந்த இளைர்களை மாங்குளம் பொலிஸார் வழி மறித்தனர். வழி மறிக்கும் போது டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்ணில் பாய்ச்சியே வழி மறித்தனர்.
இந்நிலையில் இவ்வாறு வழி மறிப்பது தவறு என அந்த இளைஞர் குழு எடுத்து கூறியபோது அவர்களுடன் பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், அச்சுறுத்தினர். அத்துடன் தகட்டு இலக்கத்தையும் வழங்க மறுத்ததுடன், அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை அந்த இளைஞர் குழுவினர் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.