ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அங்குள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் அமெரிக்க அரசு, ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர். அங்கு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர். இவர்களில் சிலர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் அமெரிக்காவை விட்டு ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு சென்றால் தலிபான்கள் தங்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பயண தடை உத்தரவை நீக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
