இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுக்கு குறித்த நிபுணர் அறிக்கைகளின் அடிப்படையில் தீர்மானம் எட்டப்படும் வரை, மனிதப் புதைகுழி மூடாதிருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் சதொச மனிதப் புதைகுழியை மூடுவதற்கு தடை விதிக்கக் கோரி மூத்த சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை ஜூன் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வட மாகாண உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மன்னார் சதொச மனிதப் புதைகுழியின் அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி, புதைகுழியில் பணியைத் தொடர வேண்டிய அவசியமில்லை என மன்னார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.
152 நாட்கள் அகழ்வின் முடிவில் மீட்கப்பட்ட உயிரியல் மற்றும் ஏனைய மாதிரிகள் உள்ளிட்ட 342 எலும்புக்கூடுகள் விசாரணை நோக்கங்களுக்கு போதுமானவை என அவர் தீர்மானித்துள்ளார்.
“எனவே, தற்போதுள்ள தரவுத் தொகுப்பு நீதவான் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட விசாரணை நோக்கங்களை பூர்த்தி செய்ய போதுமானது எனவும், எனவே வளாகத்தில் மேலும் கள தலையீடு (ஆய்வு) தேவையில்லை எனவும் நாங்கள் முடிவு செய்கிறோம்,” என வைத்தியர் டபிள்யுயூ. ஆர். ஏ. சமிந்த ராஜபக்ச நவம்பர் 2, 2024 அன்று நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், மன்னார் சதொச வெகுஜன புதைகுழியை மூடுவதற்கு மே 8 ஆம் திகதி நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தக் கோரி, மூத்த சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததோடு, சட்டமா அதிபர் மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஆகியன (OMP) பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஜூன் 2 ஆம் திகதி வவுனியா உயர் நீதிமன்றத்தில் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிபுணர் அறிக்கைகளின் அடிப்படையில் ஒரு தீர்மானம் எட்டப்படும் வரை அகழ்வு இடம்பெற்ற பகுதியை மூட வேண்டாம் என நீதிபதி எம்.எம்.எம். மிஹால் உத்தரவிட்டார்.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மன்னார் கிளையின் தலைவர் சட்டத்தரணி ரஸ்கா முபாரக் ஆகியோர் அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதி, மனிதப் புதைகுழிகள் குறித்த நிபுணர் அறிக்கைகள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு தீர்மானம் எட்டப்படும் வரை புதைகுழிகளை மூட வேண்டாம் என்று உத்தரவிட்டதாக, நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார்.
“மன்னார் புதைகுழியை போதிய சான்று ஆதாரங்கள் அந்தப் பகுதியில் இருந்து முற்று முழுதாக எடுக்கும் வரை அதனை மூடுவது சரியான செயற்பாடு அல்லவென வாதிடப்பட்டது. மேல் நீதிமன்றம் அதனை ஆராய்ந்து தீர்ப்பினை அறிவித்துள்ளது. தற்காலிகமாக அந்த புதைகுழியை மூடுவதில் இருந்து விடுவித்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தொடர்புடைய நிபுணத்துவம் வாய்ந்த அறிக்கைகளை பெற்று, அந்த அறிக்கையின் ஊடாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். முழுமையான அறிக்கைகளைப் பெற்று முடிவுகள் எடுக்கப்படும் வரை அங்கே சான்று ஆதாரங்கள் எடுக்கப்படும் வரை அதனை தொடர்ச்சியே அப்படியே வைத்திருக்கவும், தொடர்புடைய அரச அதிகாரிகளின் ஆலோசனைகளையும் பெற்று செயற்படுவது குறித்தும் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.”
அகழ்வு இடம்பெற்ற பகுதியில் ஏற்படக்கூடிய சுகாதார சீர்கேடுகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரைத்திருந்தார்.
“அப்பகுதியில் அகழ்வு பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு தொடர்பிலான விடயத்தினை கருத்தில் கொண்டு குறித்த அகழ்வுப் பகுதியினை மூடுவது தொடர்பில் அல்லது அதனை சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படாதவாறு பேணுவது தொடர்பில் மனுதாரர்கள் மற்றும் வழக்குடன் தொடர்புடைய நிபுணர்களின் பங்கேற்புடன் விஞ்ஞான ரீதியிலான செயன்முறைகளைப் பின்பற்றி முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிபதிக்கு உத்தரவிடப்படுகிறது,” என்று உயர் நீதிமன்ற நீதிபதி மிஹாலின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 5ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றம் மீண்டும் கூடியபோது, நீதிபதி, சட்டத்தரணிகள், அரச அதிகாரிகள் மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து, மேற்சொன்ன உத்தரவுக்கு அமைய, மன்னார் சதொச மனித புதைகுழியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோண்டப்பட்ட மண் குவிக்கப்பட்ட இடம், அகழ்வு செய்து எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடங்கள் மற்றும் இன்னும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என நம்பப்படும் மீதமுள்ள இடங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதற்கமைய, அகழ்வு இடம்பெற்ற இடத்தில் இருந்து அகற்றப்பட்ட மண்ணில் மேலும் சான்றுப் பொருட்கள் இருக்கக்கூடும் என்பதால் அந்த மண்ணை அகற்றாறு இருக்கவும், அகழ்வு இடம்பெற்ற குழியில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கக்கூடும் என்பதாலும், எலும்புக்கூடுகள் இருக்கலாம் என நம்பப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எலும்புகள் இருக்கலாம் என்பதாலும் அவற்றை மூடாது இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான தடயவியல் நிபுணர் சமிந்திர ராஜபக்ச, நீர் மற்றும் குப்பைகளை அகற்றுவதன் மூலம் சான்றுகள் அழிவடையாது என வழங்கிய சான்றிதழின் அடிப்படையில், மன்னார் நீதவான் நகராட்சி மன்றத்திற்கு நீர் மற்றும் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 12 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மன்னார் புதைகுழியின் அளவு
2018 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் உறுகண்டுபிடிக்கப்பட்டன.
குற்றம் இடம்பெற் இடமாக கருதப்பட்டு மன்னார் சதொச மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190ஆவது நாள் அகழ்வு விசாரணையின்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்த அமெரிக்காவின் மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம் (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என தீர்மானித்தது.
ஜூலை 2019 இல், அந்த தீர்மானத்தை கடுமையாக நிராகரித்த களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் முதுகலைப் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, வெகுஜன புதைகுழியின் காலத்தைப் பற்றிய நம்பகமான தீர்மானத்திற்கு வரக்கூடிய வகையில், ஜூலை 2019 இல், மனித எலும்புகளுடன் தோண்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்களில் புதிய விசாரணைகளை ஆரம்பித்தார்.
அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், ஒன்றாகக் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் எலும்புத் துண்டுகளும் மனித புதைகுழியில் காணப்பட்டன.