தென் அமெரிக்கா கண்டத்தின் மேற்கில் அமைந்துள்ளது பெரு . இந்த நாட்டின் டர்மா மாகாணத்தில் இரண்டு அடுக்கு சொகுசு பேருந்து ஒன்று நேற்று தலைநகர் லிமாவிலிருந்து காட்டு நகரமான லா மெர்சிடிற்கு 60க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. டால்கா மாவட்டத்திற்கு அருகில் வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த டர்மா தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
























