இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில், சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர். அவர்கள் 4 பேரும் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள்வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும், சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் கடந்த ஜூலை 15-ந்தேதி பூமிக்கு திரும்பினர். இதன் மூலம், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். இதனிடையே, விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து கடந்த 17ம் தேதி இந்தியா வந்தார். அவர் கடந்த 18ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சுபான்ஷு சுக்லா சந்தித்தார். இந்நிலையில், அதிபர் திரவுபதி முர்முவை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்தார். டில்லியில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவை அதிபர் முர்மு வாழ்த்தினார்.
























