பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில், மாவீரர்களான குடும்ப உறுப்பினர்களது நிகைவாக இன்று தமது வீட்டில் நினைவேந்தலை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோடிக்கப்பட்டிருந்த சிவப்பு-மஞ்சள் கொடிகளை அகற்ற வைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவீரர்கள் நினைவாக வருடா வருடம் நினைவேந்தல் நடத்தும் இன்றைய நவம்பர்-27 அன்று தமது வீட்டில் அவர்களது திருவுருவப்படத்தை வைத்து சிவப்பு-மஞ்சள் கொடிகளால் அலங்காரம் செய்து தயார் செய்திருந்த நிலையில் இன்று நண்பகல் திடீரென சென்ற இராணுவத்தினரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு பவள் கவச வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களில் சென்ற சுமார் முப்பதிற்கு அதிகமான இராணுவத்தினர் துப்பாக்கி முனையில் குறிதத வீட்டிற்குள் சென்று அச்சுறுத்தும் பாணியில் நடந்துள்ளதாக அறிய முடிகிறது.
வீடுகளில் நினைவேந்துமாறு நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ள நிலையில் தாம் தமது உறவுகளுக்கு தமது வீட்டில் நினைவேந்தலை செய்ய உள்ளதாக வீட்டார் இராணுவத்திற்கு தெரிவித்த போதிலும், அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த சிவப்பு-மஞ்சள் கொடிகளை துப்பாக்கி முனையில் அகற்ற வைத்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
யாரும் ஒன்று கூடி நினைவேந்தனை முன்னெடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில் மேலதிக இராணுவத்தினர் திரும்பிச் சென்றிருந்த போதிலும் அங்கு தொடர்ந்து இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வீட்டாரின் மூன்று பேர் மாவீரர்களாகிய நிலையில் அவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு கார்த்திகை பூ கோலம் போடப்பட்டு நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.