தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான யூனிசெப் உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை. யூனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் யூனிசெப், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது. இதற்கு முன்னரும் யூனிசெப் இந்தியாவின் தூதர்களாக பல திரைப் பிரபலங்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
























