கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி மையமான ராஸ் லபான் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயமடைந்தனர். மேலும், காணாமல் போன 18 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டை தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றான கத்தார், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கட்டுப்பாடு காரணமாக ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஜலசந்தி மீதான கட்டுப்பாட்டை ஈரான் தளர்த்தியதைத் தொடர்ந்து, ஏற்றுமதி நிலையங்களை மீண்டும் இயக்க கத்தார் நடவடிக்கை எடுத்தது.அந்த பணிகளின் போது, நேற்று இரவு பார்சான் எரிவாயு சப்ளை மையத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்தாக மாறியுள்ளது. இந்த பயங்கர விபத்தில், 54 பேர் காயமடைந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.






















