நைஜீரியாவில் திடீரென ஊடுருவிய ஆயுதமேந்திய மர்மக் கும்பல் ஒன்று, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 அப்பாவி மக்கள் உயிரிழந்துனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் பெரும் பதற்றத்துடனேயே காணப்பட்டு வருகிறது. ஆயுதமேந்திய பல்வேறு கும்பல்களின் நடமாட்டம் இங்குள்ள கிராமப்புறங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள பொக்கோஸ் நகரின் காவெல் கிராமத்தில், மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் திடீரென ஊடுருவிய ஆயுதமேந்திய மர்மக் கும்பல் ஒன்று, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறியடித்தபடி ஓடிய அப்பாவி மக்கள் மீது அந்த பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர். இந்த பயங்கர தாக்குதலில் பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை அக்கும்பலுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்கள் காட்டுப்பகுதிக்குள் தப்பியோடினர்.






















