பெரு நாட்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டின் கஜமர்கோ மாகாணம் சான் ஜுன் மாவட்டத்தில் இருந்து கியுடெட் டி டியோஸ் மாகாணத்திற்கு நேற்று பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 19 பேர் பயணித்தனர். சான் ஜுன் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தனர். மேலும், உயிரிழந்தவர்களில் 8 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். எஞ்சிய 6 பேரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


















