சிவகாசி பட்டாசு குடோன் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோத பட்டாசு குடோனில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இவ்விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளி விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டுகிறேன். செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளின்றி, சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தங்குதடையின்றி நடைபெற்று வந்துள்ளன என்பதை இவ்விபத்து வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஆனால், மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, சிவகாசிப் பகுதிகளில் இயங்கும் சட்டவிரோத பட்டாசு ஆலைகளையும் குடோன்களையும் கண்காணிப்பதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பு விதிகளை உறுதி செய்வதிலும் காட்டி வரும் அலட்சியமே இவ்விபத்திற்கு முக்கியக் காரணமாகும். ஏழை எளிய தொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்பு விஷயத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படும் தவெக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. எனவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த அரசு நிவாரண உதவியும், காயமடைந்தவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையும் உடனடியாக வழங்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாகப் பட்டாசு குடோன்களை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
















