ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் கருத்தை ஈரான் நிராகரித்தது. அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் வெடித்தது. இருநாடுகளுக்கும் இடையேயான மோதலால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. சர்வதேச நாடுகள் இதில் கடும் பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. போர் நடவடிக்கைகளை நிறுத்தி, நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. ஆனால், இருதரப்பும் தங்களது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று ஒருவரையொருவர் குற்றம்சாட்டியதால் ஒப்பந்தம் முறிந்தது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது. அனால், ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்கா தனது நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க முடியாது என்று ஈரான் திட்டவட்டமாக கூறி வருகிறது. இதற்கிடையே, ”ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா தனது முழு கட்டுப்பாட்டை கொண்டுள்ளது.அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியிருந்தார். டிரம்ப்பின் இந்த கூற்றை ஈரான் நிராகரித்துள்ளது. இது குறித்து ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி கூறுகையில், அமெரிக்கா அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வரை, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மீண்டும் திறக்காது. ஈரான் தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவந்து, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும். மேலும், பிராந்தியம் முழுவதும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது. ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறும் கூற்றுகளும், மீண்டும் மீண்டும் வெளியிடும் பதிவுகளும் உண்மையான நிலையை மாற்றிவிடாது” என்றார்.















