சுயாதீன அமைப்பான ‘வெரிடே ரிசேர்ச்’ நிறுவனத்தால் நடத்தப்பட்ட அண்மைய ‘Mood of the Nation’ (நாட்டின் மனநிலை) தொடர்பான கருத்துக் கணிப்பின்படி, இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள் பொதுமக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தி வருவதால், அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு தேர்தலுக்குப் பிந்தைய உச்சநிலையான 65 வீதத்திலிருந்து 50 வீதமாகக் குறைந்துள்ளது.
ஜூலை 2026 இல் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், அரசாங்கத்திற்கான ஆதரவு 49.83 வீதமாகப் பதிவாகியுள்ளது.
இது கடந்த பெப்ரவரியில் பதிவான 65 வீதத்திலிருந்து கணிசமாகக் குறைந்துள்ளது.
பொருளாதார முன்னேற்றம் குறித்த மக்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள அதிருப்தியே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என அக்கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார நிலைமைகள் மேம்பட்டு வருகின்றன என்று நம்பும் பதிலளிப்பாளர்களின் எண்ணிக்கை, முந்தைய கணிப்பில் 64 வீதமாக இருந்த நிலையில் தற்போது 41.63 வீதமாகக் குறைந்துள்ளது.
அதேவேளை, பொருளாதாரம் “மோசமடைந்து வருகிறது” என்று நம்புபவர்களின் சதவீதம், முன்னர் இருந்த சுமார் 15 வீதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 40.29 வீதமாக உயர்ந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், அதாவது 55.59 வீதம் பேர், தற்போதைய பொருளாதார நிலையை ‘மோசமானது’ என மதிப்பிட்டுள்ளனர்.
வெறும் 38 வீதம் பேர் மட்டுமே பொருளாதார நிலைமை “நல்லது” அல்லது “மிகச்சிறந்தது” எனக் கருதுகின்றனர்.
பொருளாதார மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், வெரிடே ரிசர்ச்சின் ‘பொருளாதார நம்பிக்கைச் சுட்டெண்ணையும்’ (Economic Confidence Index) எதிர்மறை நிலைக்குத் (Negative territory) தள்ளியுள்ளது.
அண்மைய கணிப்பில் இச்சுட்டெண் -8 ஆகப் பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் -39 ஆக இருந்த இச்சுட்டெண், 2025 பெப்ரவரிக்குப் பிறகே நேர்மறை நிலைக்கு நகர்ந்திருந்தது.
அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் அதிகரித்துள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 31.40 வீதம் பேர் தற்போதைய அரசாங்கம் செயல்படும் விதம் குறித்துத் தங்களுக்கு அதிருப்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ‘Mood of the Nation’ கருத்துக் கணிப்பானது, ஜூலை 11 முதல் 30 வரை நாடு தழுவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,013 வயது வந்தோரிடம் நடத்தப்பட்டது.
Vanguard Survey (Pvt) Ltd என்ற நிறுவனத்தின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பானது, 95 வீதம் நம்பிக்கையின் மட்டத்தில் அதிகபட்சமாக ±2.21 வீதம் மாதிரிப் பிழை வரம்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















