சோமாலியாவில் 6 இந்தியர்கள் உள்பட 10 மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்திய பெருங்கடல் அமைந்துள்ள இந்நாட்டில் கடற்கொள்ளையர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை சிறைபிடித்து கடற்கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கமரூன் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் கடந்த திங்கட்கிழமை துருக்கி நாட்டில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்காவில் உள்ள ஒருநாட்டிற்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் 6 இந்தியர்கள் உள்பட 10 மாலுமிகள் பயணித்தனர். இந்திய பெருங்கடலில் சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் இயல் மாவட்டத்தில் இருந்து 4 நாட்டிகல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த சரக்கு கப்பலுக்குள் நுழைந்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை சிறைபிடித்து கப்பலை கடத்தி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















