வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 6500 கோடி பீப்பாய் உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதியை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவது இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் துறையில் சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு ஈர்க்கப்படும் என்றும், வெனிசுலா அரசுக்கு 20,900 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் வெனிசுலா அரசுடன் இணைந்து உருவாக்கப்படும் புதிய தனியார் நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியில் 55 சதவீதத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான உரிமை நீண்டகாலத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெனிசுலாவில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான கச்சா எண்ணெய் இருப்புகள் உள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக நிலவி வரும் முதலீட்டு பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக அந்நாடு தனது முழு உற்பத்தித் திறனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் பெட்ரோல் விலையை குறைக்க உதவும் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
















