அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
‘நித்தம் ஒரு வானம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஹாஸ்டல்’, ‘மன்மத லீலை’, ‘போர் தொழில்’ உள்ளிட்ட படங்களில் அசோக் செல்வனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘போர் தொழில்’ திரைப்படம் அவருக்கு குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ‘தக் லைப்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘சபாநாயகன்’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘பொன் ஒன்று கண்டேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அசோக் செல்வன், கடைசியாக ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், அசோக் செல்வன் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ‘அன்பில் அவன்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அதிரடி காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள இப்படம், அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
















