பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் இந்தியா வந்துள்ளார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக பிரிக்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்துகொண்டன. இதையடுத்து, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. பிரிக்ஸ் அமைப்பில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. அதன்படி, 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் என மொத்தம் 2 நாட்கள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், எகிப்து அதிபர் எல் சிசி, இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாந்தோ, ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் டில்லி வந்த மசூத் பெசஸ்கியானை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
















