எஸ். றொசேரியன் லெம்பேட்
(02-04-2021)
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் பேரருட்திரு. கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
நீண்ட நாட்களாக உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் பேரருட்திரு. இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தனது ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவு செய்து வெள்ளிவிழா கண்டுள்ளார்.
இவர் மன்னார் மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார். அவர் 16.0—-4.—1940 அன்று யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பிறந்தார். நெடுந்தீவு ரேகா பாடசாலை , முருங்கன் மகாவித்தியாலயம், புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியை தொடர்ந்தார்.
கண்டி தேசிய குருமடம் , திருச்சி புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று, 13.12.1967 ஆம் ஆண்டு முன்னாள் யாழ் ஆயர் எமிலியான்ஸ் பிள்ளை ஆண்டகையினால் யாழ் மரியன்னை பேராலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1992ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் மன்னார் மாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்று, 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஓய்வுநிலை ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை உட்பட இலங்கையின் ஏனைய ஆயர்கள் புடை சூழ மருதமடு அன்னையின் ஆலயத்தில் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.
முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மறை மாவட்டம் மத்தியிலான தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தார். நாட்டில் நிலவிய கொடூரமான யுத்த சூழலில் துன்பங்களைச் சுமந்த மக்களின் துயரங்களைத் துடைக்க அரும் பாடுபட்டார். மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் வெளிக்கொண்டு வரவும் பாடுபட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களையும்,கடத்தப்பட்டவர்களையும் கண்டு பிடிப்பதற்காக குரல் கொடுத்தார். -மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார். குறிப்பாக மக்களின் காணி அபகரிப்பு, மீனவர்களின் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.
தமிழ் இனத்தின் துன்பங்களைத் தீர்க்க குரல் கொடுத்தமையால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பல விசாரணைகளுக்கும் முகம் கொடுத்தார். -2013 ஆம் ஆண்டு வடமாகாண தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளை சரி செய்து, தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து சி.வி .விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக்குவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
இறுதியாக 2015இல் திருந்தந்தையின் இலங்கை பயணத்திற்கான முதலாவது அட்டவணை வெளியிட்டப்பட்ட போது, அதில் தமிழ் மறை மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து போராடி இறுதியில் திருத்தந்தையை மறைசாட்சிகளின் பூமியாம் மன்னாருக்கு அழைத்து வந்தது மட்டுமன்றி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முன் கதிரைகளில் அமர வைத்து அவர்களின் வேதனைகளை திருத்தந்தைக்கு தெளிவுபடுத்தினார்.
1992 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை, அதாவது அவர் சுகயீனம் அடையும் வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக பணி செய்து வந்தார். அவர் கடந்த 2015 ஆண்டு நடுப்பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஆயர் தனது ஓய்வை அறிவித்தார்.
இவருடைய பணி ஓய்வுக்கான கோரிக்கையை பாப்பரசர் ஏற்றுக் கொண்டார்.இந்த நிலையில் சிறிது காலம் ஆயர் இல்லத்தில் இருந்து மக்களுக்காக தனது பணியை மேற்கொண்டார். எனினும் சுகவீனம் காரணமாக தொடர்ந்தும் அவர் மக்களுக்காக பணி செய்ய முடியாத நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த ஓய்வு நிலை ஆயர் அவர்கள், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருத்துவ நிலையத்தில் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது பிரிவு விசேடமாக உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு பேரிழப்பு ஆகும்.