“நிர்வாகத் திறனும், நடைமுறை அரசியலை கையாளும் பக்குவமும் கொண்ட ஆளுமை ஒன்றே வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவது முக்கியமானது”
“சேனாதிராஜா விட்டுக் கொடுத்ததால் தான், தன்னால் அரசியலுக்கு வர முடிந்தது, என்று விக்னேஸ்வரன் பலமுறை நன்றியுடன் கூறியிருக்கிறார். அவ்வாறு கூறியவர் இப்போது, மாவையை தகுதியற்றவராக அடையாளப்படுத்த முனைந்திருப்பது அவரது முன்னைய கருத்தின் உண்மைத்தன்மையை கேள்வி எழுப்பவுவைத்திருக்கிறது”
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக முன்னாள் முதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் ஒரு ஊடக செவ்வியில், வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில், பொது வேட்பாளராக களமிறக்கப்படுவதற்கு மாவை சேனாதிராசா பொருத்தமற்றவர் என்று அடையாளப்படுத்தி அவரை நிராகரித்திருக்கிறார் விக்னேஸ்வரன்.
அத்துடன், சிவகுரு ஆதீன முதல்வரான வேலன் சுவாமிகளை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனையையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
இதனை அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, நழுவ முற்பட்டிருக்கிறார்.
எனினும், நிர்வாக ஆளுமையையும், நடைமுறை அரசியலைக் கையாளும் திறமையும் கொண்ட ஒருவர் தான், முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
மாவை.சேனாதிராஜாவை தகுதியற்றவர் என்று விக்னேஸ்வரன் தன் கூற்றாக கூறவில்லை. அதனை அவர் இரா.சம்பந்தனின் கூற்றாகத் தான் முன்வைத்திருக்கிறார்.
மாவை சேனாதிரா ஜா முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமற்றவர் என்பதால் தான், தன்னை முதல்வர் வேட்பாளராக இரா.சம்பந்தன் தெரிவு செய்தார் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.